திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.29 திருச்செம்பொன்பள்ளி (செம்பனார் கோயில்) – திருநேரிசை
ஊனினுள் ளுயிரை வாட்டி
    யுணர்வினார்க் கெளிய ராகி
வானினுள் வான வர்க்கும்
    அறியலா காத வஞ்சர்
நானெனிற் றானே யென்னு
    ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும்இன் னமுது மானார்
    திருச்செம்பொன் பள்ளி யாரே.
1
நொய்யவர் விழுமி யாரும்
    நூலினுள் நெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார்
    உடலெனும் இடிஞ்சில் தன்னில்
நெய்யமர் திரியு மாகி
    நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர்
    திருச்செம்பொன் பள்ளி யாரே.
2
வெள்ளியர் கரியர் செய்யர்
    விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழி யூழி
    யுலகம தேத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத் துள்ளார்
    பஞ்சமம் பாடி யாடுந்
தெள்ளியர் கள்ளந் தீர்ப்பார்
    திருச்செம்பொன் பள்ளி யாரே.
3
தந்தையுந் தாயு மாகித்
    தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி
    முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங்
    கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார்
    திருச்செம்பொன் பள்ளி யாரே.
4
ஆறடைச் சடையார் போலும்
    அன்பருக் கன்பர் போலுங்
கூறுடை மெய்யர் போலுங்
    கோளர வரையர் போலும்
நீறுடை யழகர் போலும்
    நெய்தலே கமழு நீர்மைச்
சேறுடைக் கமல வேலித்
    திருச்செம்பொன் பள்ளி யாரே.
5
ஞாலமும் அறிய வேண்டின்
    நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான
    கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா ஆர்வச்
    செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமும் நோன்பு மாவார்
    திருச்செம்பொன் பள்ளி யாரே.
6
புரிகாலே நேசஞ் செய்ய
    இருந்தபுண் டரீகத் தாரும்
எரிகாலே மூன்று மாகி
    இமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி
    தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட எந்தை
    திருச்செம்பொன் பள்ளி யாரே.
7
காருடைக் கொன்றை மாலை
    கதிர்மதி அரவி னோடும்
நீருடைச் சடையுள் வைத்த
    நீதியார் நீதி யுள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும்
    பதினெட்டுக் கணங்க ளேத்தச்
சீரொடு பாட லானார்
    திருச்செம்பொன் பள்ளி யாரே.
8
ஓவாத மறைவல் லானும்
    ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும்
    முனிகளா னார்கள் ஏத்தும்
பூவான மூன்றும் முந்நூற்
    றறுபது மாகும் எந்தை
தேவாதி தேவ ரென்றுந்
    திருச்செம்பொன் பள்ளி யாரே.
9
அங்கங்க ளாறு நான்கும்
    அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடுஞ்
    சங்கரன் மலைஎ டுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர
    அலறிட அடர்த்து நின்றுஞ்
செங்கண்வெள் ளேற தேறுந்
    திருச்செம்பொன் பள்ளி யாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com